இராமநாதபுரம்,மே.14:-
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தவிர்க்கவும்,தடுக்கவும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 15-05-2021 (நாளை) சனிக்கிழமை காலை,இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகைதந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்ளவும்,குடும்ப அட்டைதாரர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின், கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கவும் உள்ளேன்.இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.இது கொரோனா காலம் என்பதால், நோய் பரவலை தவிர்க்க,நாம் கூட்டம் கூட கூடாது,மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலம்.ஆகவே பொதுமக்கள்,கழக நிர்வாகிகள்,மற்றும் தொண்டர்கள் அனைவரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முழு ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு நானே நேரில் வந்து உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.தற்பொழுது உள்ள நோய்த் தொற்று பரவலை மனதில் கொண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பாக தங்கள் வீட்டிலயே இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,இந்த கொரோனா காலத்தை “இதுவும் கடந்து போகும்” என்று கூறியது போல,பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை தவறாது பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும்படி மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.