கோவாக்ஸின் இரண்டாம் தவனை தடுப்பூசியை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்ட பிறகு தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் அதனால் இறப்பு விகிதம் அதிகரிப்பதாகவும் அதனை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்படும் நோயாளிகள் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நோயாளிகள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை வருவதற்கு அச்சப்படுகின்றனர்,
மருத்துவமனையில் நோயாளிகள் அதிகம் வருவதால் ஆக்சிஜன் படுக்கை, பற்றாக்குறை உள்ளதாகவும் நோய் பாதிப்பு குறைந்தவர்களை இடமாற்றம் செய்து வீட்டிற்கு அனுப்பிய பிறகு மாற்று ஏற்பாடு செய்து அதன் பின்னர் வெளியில் காத்திருப்பவர்கள் அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் மருத்துவர்கள் விடுமுறையில் சென்று விட்டால் சுழற்சி முறையில் ஒரு சில டாக்டர்கள் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் அதிக நோயாளிகள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளதால் இப்பணியில் குறைந்த டாக்டர்கள் செவிலியர்கள் இருப்பதால் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் குறைபாடு உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது
ஒரு சில நேரங்களில் மருத்துவமனை வாசலிலேயே ஆம்புலன்சில் வைத்து காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்,
எனவே மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தேவையான அளவிற்கு மருத்துவர்கள்,செவிலியர்கள் நியமித்து கூடுதலான படுக்கைகள் ஆக்ஸிஜன்,வென்டிலேட்டர் வசதிகளோடு தயார் படுத்தி கண்காணித்து இறப்பு விகித்த்தை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் மருத்துவமனையில் உள்ள அருவருக்கத்தக்க சுகாதாரமற்ற கழிவறைகள் சுத்தம் செய்திடவும், மூன்று வேளை தரமான உணவு கிடைத்திடவும் உறுதி செய்திட வேண்டும் எனவும் துறை சார்ந்த அமைச்சர்கள் உடனடியாக தலையிட்டு இப்பகுதி மருத்துவமனையில் உள்ள சீர்கேடுகளை கலைய வேண்டும் எனவும் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் வலியுறுத்தினார்.